Tuesday, October 29, 2019

புறவழியால் நுழைகிறார்கள்


என் அழகான அடுக்கல்களை
யாரோ கலைத்துப் போட்டிருக்க
வேண்டும்........

நான் வரிசைப் படுத்திய
வாசகங்களில் யாரோ
எதையெதையோ கலந்திருக்
வேண்டும்......

என் அடுக்கல்களின் இருப்பிடம்
தனித்துவத்தை இழக்கிறது
அங்கு பொருள் பட்டும் படாமல்
ஏதேதோ குவிகிறது......

நான் ஒதுக்கி விலக்கிப்
 பார்க்கிறேன் யாரோ நான் இல்லாத
நேரங்களில் அனுமதியின்றி
புறவழியாக நுழைகிறார்கள்
போலும்.......

என் வரிசைகளின் வரைவிலக்கணம்
சில பிதற்றல்களால் நிரப்பப்படுகிறது
உங்கள் இடங்களில் வரைந்து
கிழித்துப் போடுங்கள்
என் அமைவிடத்தின் அமைதியைப்
பறிக்காதீர்கள்.......

இது நிம்மதியைத் தேடி எழும்
கோட்டை..........

                 

Sunday, October 27, 2019

இறைவா_கருணை_காட்டு


மழையே சற்று ஓய்வெடு
எங்கள் செல்லத் தாரகையான்
பூமித்தாயின் மடிக்குள்
சுருண்டிருக்கிறான்......

அவன் மூவிரு தினங்களாக
கண்விழிக்க வழியின்றி கரும் இருளில்
கலங்கிக் கொண்டிருக்கிறான்......

நானும் மழை ஓய வந்து ஈ என்று
போகும் வெயிலை போல்
நொடிக்கொரு முறை அந்த
அழகோவியம் மீண்டு
விட்டதா என ஏங்கிக் கொண்டே
எட்டிப் பார்க்கிறேன்......

இன்னும் இன்னும் போராட்டமே
பதிலாகிறது பொய்களும்
பதிவாகிறது.....

என் வீட்டு முற்றத்தில் உள்ள
அடி கிணறு அவனையே
நினைவூட்டுகிறது .....

மழையே நீ ஓய்வெடு
உன் வருகை அதிகமானால்
பூமித்தாய்கு குளிர்ந்து உடல்
நடுங்கிடலாம்.......
செல்ல மகன் சுஜீத்திற்கும்
வலித்திடலாம்.......

எழுதி என்ன பயன் என்று
ஏங்கயிருந்தேன்
மழையே...... என்னையும்
எழுத வைக்கிறாய் கண்கள்
அழுத வண்ணம்......

அன்னையவள் கதறும் ஓசை
கன்னம் வலித்து
 வெடிக்கிறது இதயம்......
 கருணை
காட்டு என் இறைவா......

மண்ணறை கூட ஆறடிதான்
எங்கள் செல்ல மகனுக்கோ
நூறடிக்கு மேல் உயிர்த்திருக்க
பூமிக்குள் இடம் தந்தாய்......

இறைவா அவன் மீண்டெழும் வரை
அவன் இருப்பிடத்தை விசாலமாக்கு
அவன் பசிக்கு உணவளி......
அவனுக்கு அவன் தாய் போல் நீயே காட்சி
கொடு........

துணையிருந்து மீட்டுக் கொடு
என் இறைவா அந்த அரும் மொட்டை
மழையே நீயும் அவனுக்காக அழுகிறாயோ
கொஞ்சம் நிறுத்திக் கொள்...

பூமித்தாயின் மடியில்
அந்த பூந்தளிர் புகுந்து கிடக்கிறான்.‌.‌‌...

                            க.ஷியா

Monday, July 29, 2019

மறுமணம்_தேடி_மணவாளன்



அவர்கள் அப்படி என்ன
நியாயவாதிகளா
சிறு குறைகளை சிரசில்
ஏற்றி அறிமுகம் செய்துவிட்டு
அடுத்த பாதையில்
அமைதியாக பயணிக்க!

முட்கள் மோதும் போதும்
கதிரவன் ஆக்கிரமிக்கும் போதும்
கால்கள் சற்றே தளரும் போதும்!

காற்று வீச மறுக்கும் போதும்
மூச்சு கொஞ்சம் துடிக்கத் திணறும்
போதும் அவர்கள் குணம்
கடுகளவேனும் உணரப்படாததா!?

அவர்கள் மட்டும் நல்லவர்களா
குறைகளை கூவி ஏலம் விட்டு
குலப் பெண்ணை குற்றவாளியாக்கி
மணப் பெண்ணை மடியாக்கி
மூலையில் ஒதுங்கி விட்டு
மறு மணம் தேடி புறப்படும் அவர்கள்
நல்லவர்களாக!?

அனுசரிக்க மறந்த அறிவாளிகளுக்கு
புது மணம்தான் முடிவுரையா
அடி சறுக்க ஆணுக்கு விதியில்லையா!?

ஆசை ஆசையாய் மணந்து கொண்டு
ஆண்மையை பெண்மையை
அழகாய் மலரவிட்டு அன்பினில்
உயிர் விதைத்து அங்ஙனம் அதை இரசித்து வாழ்ந்தவர்களே!

உப்பில்லா உபசரிப்பில் தப்பெல்லாம்
கோர்த்தெடுத்து ஒன்றும் இல்லா ஒன்றுக்கு ஊரெல்லாம் கூவி அழைத்து
தப்பில்லா மனிதர் போல் வெட்டியே
போவதுதான் அழகென்பர் அதுவே
இன்று நாகரீகம் என்பர்!

அறுத்தெறிந்து பிரித்தெடுத்து
அவளையே தவிக்க விட்டு மறுமுனையில் மாலை சூடும் மகான்களே!

உங்களால் உங்களுக்கு நீதி சொல்ல
முடியுமா நீங்கள் எல்லாம் உத்தமர்
தானா!

சத்திய வேதம் சான்றாக
சகதியில்தான் சரிவீரா
உன்னத மறுமை உமக்காய்
காத்திருக்க ஒன்றும் இல்லா உலகில் தான் தற்பெருமை கொள்வீரா!

மறுமணம் ஆணுக்கு இனிதாக
பெண்ணு விமர்சனச் சாலையில் நடை
பவனியா உங்கள் கடுஞ்சொற்கள்
அதில் வரவேற்புரையா!?

நியாயங்கள் நீர் பூத்த நீறாக
பெண் எனும் பெரும் பொருள்
இன்றும் விமர்சன விடியாச்சிறையில்!

                               க.ஷியா




கடிதம் தந்த கண்ணீர்


எத்தனை முறை குத்திக்
கிழித்தாலும் என்னைச் சுற்றியே
கிடக்கும் சதைத் துண்டுகள்
என்னை தேற்ற வளர்ந்து
கொண்டுதான்
இருக்கிறது!

அலை மோதும் எதோ ஓர் நியாபகம்
மட்டும் அவ்வப்போது வந்து இனமறியாது வலித்து விட்டுப்
போகிறது!

ஆனாலும் காதலில் வீழ்வதில்லை
என்ற ஆணவம் கருவுற்றிருக்கிறது
என் மனக்கிடங்கில்
அதையே தொடர்ந்து அதுவான
எனக்கு காதலை ஆராதிக்கும்
பழக்கமற்றுப் போனது!

காலங்கள் என்னை
அலங்கரித்தது நானும் அணிந்து
கொண்டேன் பல போர்வைகளை!

ஓவ்வொரு போர்வைக்குள்ளும்
ஓவ்வொரு அனுபவம்
நான் காதலைக்
கண்டதுண்டு கொண்டதில்லை ஆதலால் அது மட்டும் கிடைக்கவில்லை!

திருமணக் கனவுகளை தினசரி
பேசும் என் முற்றம் அக்கோலத்தைக்
கூடத் தந்தது அணிந்து பார்த்தேன்
அவ்வலங்காரம் எனக்கென ஆனதல்ல
அவரவர்க்குத் தானே அந்தந்த அலங்காரங்கள்!

என் அனுபவப் போர்வைகள் சற்று
சாயம் போகத்துடங்கின
அதன் முதல் நூல் வரை வெளுத்தே
கலங்கின!

போர்வைகளை களைய துடித்தேன்
இது மட்டும் சற்று சதை குடைந்து
இதயத்தைக் கிள்ளியது
இதயமும் கொஞ்சம் கிளிஞ்சல் ஆனது!

முட்டி மோதி முக்குளித்து எழுந்து
நிற்க முனைகிறேன் முடியாது
போகிறது ஆறுதல் தேடி யாரிடமும்
போகத் தெரியாத எனக்கு!

பள்ளியறை தந்த நினைவுகள்
வந்து என் காயத்தில் சதையாகி
சுவர் மூடுகிறது அவன் என்னைச்
சேர முட்டி மோதி தட்டுண்டு போன
நியாபகமாய்!

கொந்தெளும் குருதி மட்டும்
வெளிவர வழியின்றி எனக்குள்
அணை உடைக்க ஆயத்தமானது
ஆனாலும் தடுப்புகள் பலமானது!

செய்வதறியாது துடிப்பது ஒன்றும்
எனக்கு புதிதல்ல செருகிய ஓலை
போல் மூலையில் ஓய்ந்து கிடந்தேன்!

அப்போது அங்ஙனம் எனைத் தழுவியது
அவன் காகிதம் காதலை அறியாத
எனக்கு காவியமானது அதுவே
காதலும் தந்தது!

ஓர்தலைக்காதலன் அவன்
ஓராயிரம் கனவுகளை வரைந்து வைத்திருந்தான் என்னோடாக!

கை நழுவிய பேரின்பம்
கை தழுவையில் நான் தான் புதைந்து
கிடக்கிறேனே வஞ்சனைச் சிறையில்
வாழ்ந்திருக்கிறது எனக்கான காதல்
வாழ மறுத்து விட்டேன்
உணரத் தொடர்கையில் நானே
கை நழுவி நின்றேன்!

                                         க.ஷியா

என் கணக்கு இன்னும் நிலுவையில்


ஓடுகிறேன் ஓடுகிறேன்
ஒரு நொடியேனும் ஓய்ந்திடாது
ஓடுகிறேன் ஒன்றையும் எண்ணாது
ஓட்டத்தில் மட்டும் நிலை கொள்கிறேன்!

என் சுற்றத்தார் என் பக்கத்தார்
எவருக்கும் விடை கொடாது விழிப்பின்றி
ஓடுகிறேன்!

வாலிபம் கடந்திடும் முன்னே
நான் யாரென நிறுவிட ஓடுகிறேன்
வயதுக்கு வயது மாற்றம் கொண்டு
தரும் சுகங்களை மறந்து ஓடுகிறேன்!

அன்றொரு நாள் நான்யென்னும்
எனக்கு முகவரி கேட்டது பல முகங்கள்
அன்றிலிருந்து நான் என்பதை யாரென்று
உணர ஓடுகிறேன் நான்தான் நான் உணரவில்லை!

என்னில் இந்த வாழ்க்கை
தோரணை
கட்டி அலங்கரித்த உறவெனும் பூக்கள்
ஒவ்வொன்றாய்ப் பூத்து நின்றது
விழியோடு வாங்கி வளியோடு நிறுத்தி
விட்டு ஓடுகிறேன்!

ஓடித்தான் தேய்கிறேன் தேய்தல்
கொஞ்சம் தேகம் தின்றது வலிமை கொஞ்சம் தள்ளி நின்றது!

சில நாட்களுக்கு முன்பு என் ஓட்டத்தில்
ஓர் சோர்வு வந்தது ஒதுங்கச் சொன்னது
ஓட்டம் அப்போதும் அடங்க மறுத்தது மனம்!

கண்களில் ஏதோ கூசல்கள் பாதைகள்
ஒவ்வொன்றும் இரண்டு மூன்றாய்
பிரிந்து வெளிப்படுகிறது நான் எழுந்து
நடக்க எப்படி!?

இன்று என் கால்களை கேலி செய்கிறது
என் மனம் ஓடிக்களைத்தாயா என்று
அப்போது என் மகவெனும் உறவு என் கால்களுக்கு காலாகிறது!

என் கால்களில் இன்னொரு கால் இணையும் போதுதான் காலம் எனை வென்று கடந்ததை உணர்ந்தேன்
அதில் நான் வைத்த வெற்றிடம் அறிந்தேன்!

மனைவியின் பாசம் மக்களின் நேசம்
பெற்றவர் பேரன்பு சுற்றத்தார் அனுசரிப்பு இவை எல்லாம் வெறும் சொத்துக்காய் இழந்தேன் என்று!

சொத்துக்கள் என்று பல பத்திரங்களை
அடுக்கி வைத்தேன் சொந்தளை பத்திரப் படுத்த மறந்தேன் அப்பத்திரங்கள் அங்கேயே இருக்கிறது
பந்தங்கள் இன்று என் காலாக என்னுடன் நிற்கிறது!

நான் அடைக்க மறந்த அன்புக்கணக்கு
இன்னும் நிலுவையில் நிற்கிறது
விதி விடை தர வருகிறது!

கொஞ்சம் ஓய்வெடுங்களேன்



சில நாட்களாக எனக்குள்
ஒரு வகை வலி
நிற்கவோ நடக்கவோ ஏன் வலியால்
வலிதாங்காது துடிக்கவோ
இயலாத இயலாமை!

என் உடலின் பாகங்களை
எலிகள் கூடி அவ்வப்போது
நறும்புவதாய் ஓர் உணர்வு
என் முதுகுப் பாகத்தில்
ஏதோ ஓர் பாரம் வந்தமர்ந்த
சோகம்!

பல தருணங்களில் என் சுவாசக் குழாயில் யாரோ நுணி விரலால்
மூடுவது போல் ஒரு திணறல்!

மாத்திரைகள் ஆகாரம் ஆகிறது
மருந்துகள் குடிபாணமாகிறது
மனதும் கொஞ்சம் மயங்கியே
சோர்கிறது!

மருத்துவமனை உறவாகிறது
மருத்துவர்கள் கூடி
உபசரிக்கின்றனர் அங்கு கசப்பு
உணவுகள் வாய் வழியும்
கடுத்து வலிக்கும் பாணங்கள்
உடல் வழியும் என்று பரிமாறப்படுகிறது
வலிப்பசியாற!

முயன்று முயன்று மீளாது முடிவில்
மருந்துகளுக்கு அடிமையாகினேன்
மருந்துகள் கூட போதைப் பொருள் போல் மணியானதும் அருந்தச் சொல்லி
அலரமடிக்கிறது உணர்வு!

நாடித்துடிப்புகளுக்கு நல்லதொரு
காவலாளி நாளுக்கு பலமுறை
வந்து கவனிக்கிறார்
நான் துடிக்கிறேன் அதனால் தான்!

கால்கள் அதீத ஆர்ப்பாட்டம்
செய்கிறது கத்தி முனையால்
சிறிதாய் ஓர் யுத்தம் செய்ய வேண்டுமாம் சில நிமிட நீடிப்பில்!

உயிருடன் ஒரு சபதம் அப்போது
நீ ஊர்கையில் உடலில் ஓர் இடத்தில் மட்டும் சில நொடிகள் உனை நிறுத்தி வைப்போம் என்று!

வெட்டி எறிந்த சதைத் துண்டுகளின்
சாபமாய் இருக்குமோ என்னவோ
விறைப்பை வென்று வலிகள்
குடி கொள்ளுவது!

ஓய்வுக்கு கூட ஒதுங்க இயலாத
நோவின் முண்டியடிப்பு
பல பக்குவங்களை கற்றுத் தந்தாலும்
கண்ணீரே பந்தயம் போட்டு ஜெய்க்கிறது!

என் உயிரின் நுன்னுயிர்கள்
என்னுடன் விளையாடியதன்
விளைவா இது அப்படியானால்
அவர்களுக்கு என் பணிவான
படிவம் ஒன்று
கொஞ்சம் ஓய்வெடுங்களேன்
நுண்ணுயிர்களே என் மென்னுடல்
வலிக்கிறது!

இந்த நேயவளின் நோய் தாளா
விண்ணப்பம் இது!

Sunday, April 28, 2019

கல்லறையில் ஒரு முறை

என்னவென்று எண்ணிப் பார்க்கிறேன்
என்னால் முடியவில்லை என்று
இதயமே இடிந்து போகிறது
இருப்பினும் சில இதயங்கள் கண்டு
வியர்ந்து போகிறேன்!

பட்டிலே உடுத்து பகட்டிலே வாழ்ந்தவர்
கல்லறை கண்டேன்
பட்டினியால் கிடந்து கந்தையைக்
கசக்கிக் கட்டியோர் கல்லறையும்
கண்டேன்!

பூமியில் பூசிய வாசனை என்ன
பொறுமையில் பொருத்திய
தீப் பொறி என்ன பார்வையில் எரித்திடும் கோபங்கள் என்ன
அத்தனையும் ஆறடிக் குழிக்குள்ளே
அவஸ்தையில் திணறுதல் கண்டேன்!

நிமிர்ந்த நடையில் பரந்த திமிறும்
பசித்த வயிறை மறந்த மனமும்
தொழுகை தன்னை வெறுத்த மனுவும்
இடிந்த குழியில் இருப்பதைக் கண்டேன்!

பதவி என்னும் பொறுப்பைக் கொண்டு
நல்லவை கெட்டவை அளந்த கைகள்
அடங்கி ஒடுங்கி அமிழ்ந்து கிடப்பதைக்
கண்டேன்!

கொடையினை கொடுக்க மறந்து
கோமளத்தில் சாவியைத் தொங்க
விட்டு கோபுரத் தட்டினில் நின்று குடிசையின் உடைசல் கண்டு
மகிழ்தோரும் அங்குதான் வாழக் கண்டேன்!

மனிதனில் தரம் பிரித்து பந்தியை
சந்தில் வைத்து பாகு பாடு கொண்டு
வாழ்ந்த பணக்கார பதறுகளும்
அங்குதான் அடங்கக் கண்டேன்!

ஏனடா மானிடா ஏகனை மறந்திட்டாய்
எம்புவி எமதல்ல இருப்பினும்
எகத்தாளமாய் வாழ்ந்தவர் ஏழையாய்
வாழ்ந்தவர் எல்லாம் சமாதியில் சமமடா
ஆன்மாவை அவன் கரம் பற்ற அடுத்தவர் உடல் புதைத்த இடத்தில் உறங்குவோர் நிலை கண்டு மாறாதோ உன் மனம்!

                                                  க. ஷியா

அக்கினித் தரை

தீ எனத் தீக்கிறது வெயில்
என் பாதங்கள் தீந்தே
போகிறது!

வேர்வையின் நதியில்
என் தேகங்கள் நீந்த
போர்வைகளை எடுத்தெறிந்திட
போர் தொடுத்திடும் கரம்!

சுட்டன பட்ட இடமெல்லாம் சுட்டன
அதில் இதயமும் கொஞ்சம்
பட்டன!

சிற்றெறும்புகள் சிதறாமல்
அணிவகுக்குது என் கால்களோ
சிந்தத் துடிக்கிறது சீழ்களை!

வெயில் கீறத் துடிக்குது
உயிர் தாவத் துடிக்குது
கால நிலை கூட காய்ந்து கிடக்குது!

எங்குதான் நீந்த வியர்வை
நதியில் வெந்த உடல்கள்
எங்குதான் நீந்த.....!

காற்றும் காற்றாய் இல்லையே
கவிழ்தே கொட்டுகிறது தீப் பிளம்பை!

இயற்கைக்கு என்னவாயிற்று
அவைகளை அவைகளே சுவாசிக்கத்
துடிக்குது போல!

அந்தக் கோழி இறகு எனை
உணர்ந்ததா என்ன காற்றின் சிறகில்
ஏறி வந்து என் தோள்களில்
சரமாகுது!

தோரணை போடும் வியர்வைத் துளியே
என் தேகத்தில் பதுங்காதே!

முகம் தடவும் சுருள் முடியே
இளநரை விலகுது அவள்
கூந்தலை மூடு முகம் கொஞ்சம்
இளைப்பாறட்டும்!

தென்னங் கீற்றில் வந்துரசும்
காற்றே இந்தத் தரையைக் கொஞ்சம்
தலை கோதாயோ!

அவிழ்ந்து கிடக்கும் அக்கினி கொஞ்சம்
எழுந்து பறக்கட்டும் குளிர்ந்து
சுவாசிக்க!
                                        க. ஷியா

ஒரு நிமிடம் உணர்ந்தேன்

இரத்தத் தாகமும் இல்லை
மற்றும் ஓர் நேசமும் இல்லை
இருப்பினும் ஏன் இந்த
காதல்!

பனிக்குடம் உடைத்து
பால் மடி சுரந்திட தொப்புளில்
வலித்திட நான் தொல்லைகள்
தந்ததும் இல்லை இருப்பினும்
ஏன் இந்த நேசம்!

உன் இடையில் என்னுடல்
சுமந்ததும் இல்லை
உன் தோள்களில் நான்
தாவிக் குதித்தொரு ராட்டிணம்
சுத்தவும் இல்லை இருப்பினும்
ஏன் இந்த ஆவல்!

நிலவினை உன்னுடன் ரசித்ததும்
இல்லை நிழல் என உன் விரல்
பிடித்ததும் இல்லை
இருப்பினும் ஏன் உன்னில்
எனக்கான துடிப்பு!

சிந்திக்கச் சிந்திக்க சிந்தை
மகிழுது பார் உன் அன்பில்
நனைந்தொரு நெஞ்சம்
அழுவதைப் பார்!

நேசங்கள் பாசங்கள் கருவறை
மட்டும் தருவதில்லை
நேர்மையும் நெஞ்சம் கொள்
தூய்மையும் ஆலம் முழுதும்
அள்ளித் தருமே தூய்மையே
நீ தூசில் அண்டாதிரு!
                                        க.ஷியா.

நிலா முத்தம் வேண்டும்

இந்த இரவுப் பாயில்
தினமும் தூங்கும் எனக்கு
நிலவு முத்தம் தின்ன
வேண்டும் போல்
எண்ணி!

மணலிடம் முதுகை
கொடுத்து மல்லாந்து
கண்ணெறிந்தேன்!

அங்கே தென்னங்கீற்று
துண்டு போடுகிறது நிலவை!

கன்னங்கள் எல்லாம் கீறல்
அந்த நிலவில் முத்தம் தின்னும்
ஆசை நீங்கி தென்னங்கீற்றை
முறைத்த படி மனதுக்குள்
விம்மி எழுந்து நடந்தேன்!

இந்த இரவுப் பாயில் புழுக்கம்
வந்து அமர்ந்து கொண்டு
அதன் மேல் உறங்கச் சொல்கிறது!

இப்படித்தான் இந்த இரவுக்காறி
நிலவு முத்தம் தின்னவும் விடுவதில்லை
நிறைந்த தூக்கம் தருவதும் இல்லை!

விடியப் போகும் விடியலில்
இருதயத்தில் சூரியன் சுடும்
அப்போதும் இருக்கத்தான் போகிறோம்!

க. ஷியா
இலங்கை.

போதை ஒழிப்போம் புது யுகம் படைப்போம்

சிக்கன வாழ்கையில்
சிரிக்க வைத்து சிதைக்கிறது!

அத்தனை குணங்களையும்
மறக்கடித்து சீரழிக்கிறது!

குரல் வளை அவித்து குடலினுள்
குவிந்து உடலினை துளைத்து
உருவிருக்க உனைத் தின்கிறதே
போதை!

எத்தனை கூக்குரல் எங்கெல்லாம்
விழித்திட விளம்பரங்கள்
கண் முன்னே மரணங்கள்!

கண்டு கொண்டே தொண்டு போல்
செய்கிறாயே!

தீண்டாதே உருவித்தின்கிறது உனை
மீண்டு வா மீட்டெடு காத்திருக்கிறது
புது யுகம்!
               

குரோதம் காணும் குருதி

வனாந்தரம் அமைதி காண
வையகம் ஏனோ அழுகிறது
கொய்திட்ட தலைகளை
கோர்த்து வைத்து
எய்தவை பற்றிக் கேட்போமா.....!?
எதுவென்று அறியாமல்
முளுசுமே.....!

மழலைகள் கோரச் சத்தம்
மடுவிலும் மலையிலும் சிதறி
எழுகிறதே தீங்கினை வினவி ஒரு
விடை காண்போமா.......!?
உலகின் பொருள் அறியாது தவிக்குமே....!

வல்லவன் சொல்லாச் செயல்களை
வலிந்து செய்யும் நாசர்களை
வெறுத்து விலகிடலாம்!

வஞ்சனை அறியாது வாழ்ந்த
மக்கள் நெஞ்சினைத் துளைத்து
நோவினை கொடுத்து பஞ்சு போல்
பறந்தனரே அவர்கள் உடல்கள்!

என்னென்று ஆறும் துயர்
எங்கென்று தீர்ப்பது இழப்பினை
ஏங்கித் தவிக்குது மனம்!

வஞ்சகர் செயலால் வாயில்லாப்
பூச்சிகளும் விமர்சனச் சிறையில்
புள்ளியாய் மின்னுதே
அவர்கள் எள்ளளவும் என்னாதோர்
தீவிரவாதம் தனை!

செங்குருதி கொண்ட உடல்
சுவர்களில் அப்பிக் கொள்ள
ஈனர்கள் செயலால் எங்கள் உள்ளமும்
ஏசித் தீர்க்குதே!

நாளை நாங்களும் உயிர் இழந்த
தசைகளால் சுவர் ஒட்டி ஓவியம்
ஆகலாம் அந்த ஓவியங்களை
கழுகுகள் கூட சுவை காணலாம்!

மானிட வாழ்விலே மதங்கள் பழியில்லை அதை உணர்ந்தவர்
மனதில் பகையில்லை!

கொன்றவன் சென்றவன் கண்டதுதான்
என்னவோ......!?
இருப்பவரேனும் இதை எண்ணிப் பார்க்க மறுப்பதும் ஏனோ...!?

மதங்களும் திரு மறையதும்
வாழ்வுக்கு வழியடா அதை
சினங்களுக்குச் சின்னமாக்கியது
ஏனடா!?

பேசித் தீர்க்க தீரும் பகையை நீ
ஏனோ தாக்கித் தழைக்க விடுகிறாய்
ஆறாத துயரால் அறிவிப்பு இன்றி
அழுகிறது கண்கள்!

மானுடா மனிதம் காத்திட வா.


                                                      ஷியா

Saturday, March 23, 2019

பிள்ளை



முத்தங்களைத் தொட்டு
வைத்த உன் இதழ்கள்
சத்தமின்றி உறங்குகிறது!

அதை வாங்கிக் கொண்ட
கன்னங்கள் மட்டும்
தாகத்தில் தவிக்கிறது!

பத்து விரல் இடுக்குகளும்
மொத்தமாக இறுகப் பின்னி
இழுத்தணைக்கிறாய்!


உன் செவ்விதழ்கள் கொண்டு
எனை மிச்சம் இன்றி தின்கிறாய்!

மார்பினை முட்டி உரசி
தோளினைத் தடவுகிறாய்
நான் வாடிடாக் கொடியென
ஸ்பரிசம் தடவிக் காட்டுகிறாய்!


என் அடி மடி தேடி
ஆவல் கொள்கிறாய் என் மேனியை
தினமும் கால்களால் பின்னுகிறாய்!

அப்பி வைத்த எச்சில்கள்
அழுக்காக்க அப்படியே நாவால்
எனைக் குழிப்பாட்டுகிறாய்!

மொத்த நேர தித்திப்பை எனக்கே
ஊட்டுகிறாய்
என் கோடை நதியைக் கட்டி வைத்து
நீ உருவெடுத்தாய்!

மேலாடை நகர்ந்தால் வெட்கமல்லவா
நீ என் உயிர் உறை நுழைந்து
உருவெடுத்தாய் புனிதம் தான்!


தீராத மோகங்கள் இரண்டு
மோத பாராளும் காதலுக்கு
பாங்கான பரிசாக நீ வந்தாய்!

வேண்டாத மாதுக்குள் கூட
வெகுவாக குடி புகுவாய்
வேண்டும் என்று அழுதவற்கும்
தூரம் நின்று சோதிப்பாய்
உன் தித்திப்போ திகட்டாது போ!

                                  க.ஷியா
                                 இலங்கை

வந்து விடு


வீங்கிருள் திரை தொடுக்க
கயல்களும் காத்திருக்க
கயவனே எனை களவாடி
மறைந்தாயே நெஞ்சின்
துடிப்பினை சடுகதியாக்கி
விட்டு!

குழலியில் கரு விழி மையம்
கொள்ள குமரி நான்
கதறியே உன்னை தேட
பதுமைபோல் எங்கு சென்று
அமர்ந்தாயோ
இங்கும் உனை காணேன்!

நாளிகை கூட நாவைத்
தடுக்கி ஓடுதே
நான் உனை நலம் கேட்டால்!

விடியலில் வந்து விடு
விளுங்கிய ஏக்கங்கள்
விடை பெறட்டும்!

                                        க.ஷியா.
                                        இலங்கை


புதிய பாதை



எடுத்து வைத்த கால்கல்
எல்லாம் எத்தி விட்ட காலம்
கண்டு நெற்றி விறைக்க
அழுததுண்டு!

தொட்டு வைத்த முயற்சி எல்லாம்
கெட்டு விட்ட தீனி போல
கொட்டி விட்டு புதைத்ததுண்டு!



ஏணி என்னும் தோழர்கள்
தேடி ஏமாற்றம் எனும்
சாலையில் நானும் என்னிலை
மறந்து நடந்ததுண்டு!

வழி அறிந்த குருடர் போலே
வலம் குறைந்த மனிதர்கள்
போலே சுயம் மறந்து அலைந்ததுண்டு!


இப்படியே இருந்து விட்டால்
எப்படித்தான் வாழ்வதென்ற
வினா எழவும் விதியது நேரம்
ஒதுக்கியது விழித்தெழுந்தேன்!

கடந்து வந்த பாதையெல்லாம்
முட்கள் கொய்தேன் அதன் முனை
உடைத்து பதம் செய்தேன்
அடுத்தவர் அறிவுறையை கொஞ்சம்
எடுத்து ஓரம் வைத்தேன்!


எனது புத்தியை உயிர்ப்பித்தேன்
காலம் தந்த வடுக்களை சேமித்தேன்
முனை உடைத்த முட்களுடன்
கலந்து பாதை ஒன்றைச் செப்பனிட்டேன்!

நடந்த போது சற்றே சறுக்கியதுதான்
விரைந்த போதும் கொஞ்சம்
குடைந்து ஒரு வலி கண்டதுதான்
மயங்கவில்லை
தயங்கவில்லை
எழுந்து நடக்கிறேன் எனது புதிய பாதையில் துணையாக எனது வெற்றிகள்!

நான் விழுந்த இடமெல்லாம்
விதைத்த முட்கள் இன்று எழுந்து
பூத்தூவுது!

                                 க.ஷியா
                                 இலங்கை.



தேர்தல்


அடுத்தடுத்து வந்தாலும்
அடுக்கடுக்காய்
அழுக்கு விளைவுகளே
தொடுத்து வரும்!

எடுத்தெடுத்து
போட்டாலும் எதுவும்
எமக்கென்று
நினையாதே!

இலித்துச் சிரித்து
அழைத்தாலும் இருக்கும்
கசடு மனசோடு!

அடித்த மையும் கொடுத்த
வாக்கும் அடுத்து சில
நிமிடங்களே!

வீதிகள் விழாக்காணும்
இருள்களும் சமாதி
போகும் இலுக்கு கூரை
மினுங்கும் தகடாக!

இடுப்பு வேட்டி இரும்பு வாளி
அடிபம்பு குடத்துக் கோர்வை
பட்டாவும் பரிவாரமும் இன்னும்
சில காட்சிகளும்!

ஒலி பெருக்கி வாய் சத்தமாகும்
தெரு பெருக்கி சுத்தமாகும்!

மேடைக்கு மேதை கூட்டம்
ஓடைக்குள் மூடர் கூட்டம்
நாளைக்கும் விடிவு இல்லை!

வாக்குகள் வேண்டும் என்று
வாக்கினை ஓடையில்
எழுதி விடுவர் ஜெய்த்ததும்
கரைந்திடும் காலமும் மறைத்திடும்!

ஆசனம் அமரும் முன்னே
பாறையில் ஆறு ஓடும்
குருதியில் குளியல்
காணும்!

பொது மகன் உடமையில்
தீப்பிடிக்கும் பொழுதுகள்
புகைகளில் ஒழிக்கப்படும்!

பதவிக்காய் சத்தியம்
சாகடிக்கப்படும்
பார்வையில் தேன் ஊறும்!

யாரோ ஒருவனாய்
இருப்பான்
ஊரில் உள்ள உன்னை
எல்லாம்
தத்தெடுப்பான்!

ஊற்றி வைத்த தாரை
எல்லாம் வாக்கெடுப்பு
முடியும் முன்னே
வண்டி ஓடி தேய்த்து
வைப்பான்!

ஆளுக்கொரு அமைச்சு
வரும் ஆயிரம் தலைமை
தோன்றும் ஆனாலும் ஆபத்தில்
பல தெய்வ வழிபாடு போல்
பரிதவித்து மக்கள் நிற்பர்!

ஏனடா மானிடா......
யாரடா உண்மையாளன்
அப்படியும் ஒருவன் வந்தால்
அவன் நெற்றியையோ
நெஞ்சினையோ தோட்டாக்கள்
துளைக்கும்!

என்னதான் வழி .......!!!!!
இப்படியே வழி இன்றி
வரி கொடுத்தே வறுகி
விட்டால் மறு தலை முறை
மண்டியிடும்!

மறுபடியும் தேர்தல் வரும்
தகட்டுக் கூரை ஓடாய் மாறும்
பாறையில் நதி ஓடும்
குருதியில் குழியில் காணும்
மீண்டும் ஓர் சமூகம் நினைவு
கூறும்!
                       ஷியா.


Sunday, February 3, 2019

ரதி

நதிக்கரை அலைகளை எதிர்
கொள்ளும் மணல் மேடுகளே
ரதி அழகினில் சிலிர்த்திடும்
சிலையென அழகாகுங்களேன்.....

அவள் வாசனைப் பூப்பந்தோ
என் வாசலில் மணச் செண்டோ
நான் ஈ எனச் சிறகசைக்க.....
நாணின அவள் வதனம்!

சூரிய சந்திர சூடுகள்
தணித்தொரு கீற்றினை
சுமந்திடு தென்றலே....
பளிங்கு மேனியில்
மினுங்கும் ஜீவன் தணிந்து
வலம் வரவே.....!


வானவில் கோடுகள்
தாரகை மேனியில்
வானவர் கண்களும்
களவு கற்கிறது....
இவள் வதனத்தை விழிகளால்
திருடிக் கொள்ள....!

இத்தனை எழிலும் மொத்தமாய்
இருக்க மற்றவர் பார்வை
திருட்டையே நெருங்க
இந்தப் பித்தனோ பக்த்தன்
ஆகிப் போவேனோ......!




Tuesday, January 29, 2019

நீயா நானா

பிறந்தோம் இறந்தோம்
என்பதற்கு நடுவில்
எத்தனை சூழ்ச்சுமங்கள்!

அத்தனையும் அலற
வைத்தும், நகர முடியாது
போன சிறையே, உலக வாழ்க்கை!

இதை உணராத உள்ளங்களில்
எத்தனை கரடு முரடான
சிந்தனைகள்!

நித்தமும், நித்தமும், இரத்தமே
கொப்பளித்து, உதிரத் துளி விழும்
இடத்திலே முகம் புதைக்க
எத்தனை, எத்தனை ஆவல்கள்!

மனிதம் தாண்டி எது உண்டு'
எதை அடைய இத்தனை
பிளவுகள், நாளை நீயோ....
நானோ.... உயிர் பிரிந்தால்
ஒரு சில நிமிடங்கள் மட்டுமே
உலகை வசித்திருப்போம்
பிணம் என்னும் பெயர் கொண்டு!

இத்தனையும் நிஜம் என்று
புரிந்தும் மாய மேடையில்
பேடை நாடகமும், நீளும் குரோதமும்
எதற்காக!

கோடிகளைக் குவிப்பதும், ஏழைகள்
தவிப்பதுமான விரு விரு போட்டியில்
வீதி நாய்கள் குரைப்பதும்
விரோதங்கள் சிரிப்பதும், பாவங்கள் அழுவதும், மொட்டுகள் சிதைவதும்
சொத்தெல்லாம் அழிவதுமாய்
பல வகை அரங்கேற்றம்!

யார் என்று பார்த்தால் எல்லாம்
உண்மைக்குப் புறமின்றி இரண்டே
ஜாதிதான், அந்த இரண்டு ஜாதிக்கோ
ஆஹ.... எத்தனை நீதி
எத்தனை சாதி, நீங்கள் வகுத்தது உங்களுக்கான சாதி அல்ல சதி
உணர மறுத்த உங்களால் முடிகிறது
உங்கள் விதி!


Sunday, January 27, 2019

இழிந்தவர் யாருண்டு

ரத்தத்தின் ரத்தங்கள்
உயிர் சப்தத்தின்
கூச்சல்கள் உயர்ந்தே
ஒலிக்கட்டும்..... ஒலிக்கட்டும்......

தீ என்ன, நீர் என்ன
தீராத தாகங்கள்
வீர் கொண்ட
வேகத்தில் பாயாதோ
ஆவல்கள்......

ஆட்சியில் பூச்சியங்கள்
ஆழ்கையில்
ஆழி எழுந்தது தவறா
ஆணை எழுப்பிடு தோழா.....

யாழில் அறுந்திடும்
நூலை எடுத்தொரு
காவியம் படைத்திடு தோழா.....

யானைப் பலம்
கொண்டு யாதும்
நமக்கென்று வீறு நடை
பயின்றிடு தோழா.....

(சேர சோழன் அழிந்ததால்
வீரம் குன்றிடல் முறையா
வீன் பேதம் வகுத்திடல்
ஆழகா.......)

தேக விசை எழ தீயில்
துயில் கழைந்திடு
தோழா......

சாது மிரண்டிட
சாவும் ஒழிந்திட
சடையில் அடி
தோழா......

சாதி விரண்டிட
சப்தம் அடங்கிட
ஏறி வதம்
செய்திடு எம் தவைவா....

பூமி அதிர்ந்திட
பூவும் கசங்கிட
உறங்குதல் முறையா
சொல் வீரா....


(புத்தரின் சிலையில்
பொத்தல்கள் விழுந்தால்
சோனகன் மேல்
பழியா ......)

எங்கள் முஹம்மதின்
நல் வழிகளை - நீ
தீயிலே பொசுக்குதல்
முறையா.....

நச்சுக்காற்றை பரப்பி
குற்றச் சாட்டை எழுப்பி
குலம் அழிப்பது உந்தன்
உந்தன் சதியே....

புத்தன் காந்தி போலே
எங்கள் உத்தம அஷ்ரப்
வாழ்ந்தான்....

பொத்திப் பொத்தி
எம்மை எதிரிகள் நின்று
காத்தான்.....

இன்று இல்லையே
உங்கள் வாய்களை
சொல்லால் அடக்கிட
அவர் இல்லையே இல்லையே....

ஏய்... தோழா நம் தோழ்களில்,
தோழ்களில் பூமி பந்தை
தோரணமாக்கிட
வா தோழா......

எதிர் காலத்தை, காலத்தை
சாதகமாக்கிட
வா.... தோழா....

எம்மை அழித்திட
ரத்தம் குடித்திட
துள்ளுதல், துள்ளுதல்
ஏனோ தெரியவில்லையே...

இந்த மண் மேலே
நாம் பிறந்தேமே
சரி சமமாக நாம்
வாழ்வோமே.....
வாழ்வோமே....

உங்கள் தீ செயல்
எங்கள் தேகத்தை, தேகத்தை
மட்டுமே அழித்திட முடியும்
அகிம்சையை அழித்திட முடியாதே....

வா... தோழா....
நம் வாழ்க்கையை,
வாழ்க்கையை
ஒரு நந்தவனமாக்கி
நாம் விரைவோம்...

சாதி குப்பை, துசு தட்டி
சமரம் செய்வோமே....
வா..... தோழா....



Thursday, January 17, 2019

அழகியின் வெட்கம்

பொழுதுகள்
மந்தம் கொண்டது
மழை மேகத்தின்
வருகையால்!

உன் இதழ்களோ
தேனைப் பொழிந்தது
நீ வெட்கம் கொண்டு
சிவந்ததால்!

கவிஞனை அழைத்து
கவி புனையும்
வெட்கச் சோலையே
எனை உன் வெட்கங்கள்
களவாடியதை
அறிவாயோ!

அடடா.....
இதழ் விரித்த
வெட்கத்தால்
உன் கன்னங்களோ
குழலுக்குள் ஒளிந்து
கொள்ள இடம்
தேடுதே....
இவன் விழி காயுதே!

Wednesday, January 16, 2019

காலச்சக்கரம்



அவன் தந்து போன
நினைவுகளில்
நொந்து போன 
இதயம் தான்
என் இதயம்!


அவன் வென்று போனது
என்னைத்தான் என்
அன்பையல்ல....
உயிர்
கொன்று போனவன்
கொண்டு போன
புன்னகைகள் பூக்க 
மறுத்தனவே...
ஏக்கம் திணித்தனவே!


ஏளனப் பொழுதுகள் குவிய
என்னென்றும் கேளாது 
ஓடும் நிமிடங்கள் கூட
என்னைத் தடவிப் 
போனனவே...!

ஆற்றருகே அமர்ந்திருந்து
ஊட்டி விட்ட நினைவுகள்
எல்லாம் ஊசலாடுகின்றனவே!



கோர்த்து வைத்த கனவுகளை
சேற்றில் புதைத்திருந்தாலும்
கோரையாகவேனும்
படர்ந்திருக்கும்...
தீயில் இட்டு திணறவைத்தவன் 
நீயே - தீ!

வார்த்தைகளில் வாழ்வளித்த
உன் உதடுகள் அதே 
வார்தை கொண்டு வதம்
செய்தனவே - எனை
ரணம் செய்தனவே!


எதுவாயினும்,என்னை 
விட்டுப் பிரியாதே
என்று நீ கூறிய 
வாசகம் இன்னும்
அறைகூவலாகவே
ஒலிக்கிறது விதியிடம்
நான் தோற்ற பின்னும்!


எனை பிரிவதற்கு 
உன் நட்பை 
ஆயுதமாக்கினாய்
அவைகளுக்கும் இரக்கம்
செத்துப் போனனவே
இதழாகளாலே அவைகளும்
ஈட்டி எய்தனவே!

உன் உறவுகள் 
உன் மீதான அக்றையை
என்மீது விசமாய்த் தொழித்தன
விழுந்து எழுந்தவள் 
என்பதால் விழும்போது
வலிக்கவில்லை....!


உன்மேலான 
நினைவாற்றல்
ஒன்றுக்கு ஒன்று 
இலவசம் என்று 
எண்ணியதோ தெரியவில்லை
என் இதயம்!

எனை நங்கூரமிட்டு
கட்டிவைத்தது எங்கும் 
அசையாது.....
நான் மீண்டிராத போதும்
மீண்டும் எழுந்தேன்!


காலம் உன் நினைவுகளை
என்னில் மாற்றியது 
சில வருடங்கள் கடந்தனதான்
இருப்பினும் காற்று வந்து
போவதுபோல் உன் 
நினைவுகள் வராது இருப்பதில்லை!

ஆனால் எதுவும் எனை 
பாதிக்கவில்லை
மீண்டும் உன் கண்களைக் 
காணும் வரை.....!


கண்ட போதும் 
நான் விழவில்லை
ஆனால் ஏனோ வலிக்கிறது!

எழத் தெரியாதவளாய் 
சிதைந்து கிடந்தேன்
அந்த சில நிமிடங்கள்
ஏனோ உன் நண்பனின் 
நட்பையும் துண்டிக்க
மனம் மண்டியிட்டது
அதுவும் எனை வென்று 
விட்டது!


இல்லறம் இணைந்தாய்
என்று காதுகள்
கீறல் கொண்டது
என்னிடத்தில் அவளைக்
கண்ட போது இதயம் தான்
கொஞ்சம் வலித்தது!
நினைவுக்கு வந்தது
உன் வார்த்தைகள் என்பதால்!


நீ ..... நீயாக இருக்கிறாய்
நான் எதுவாக என்று
அறியாத போதும்!

ஷியா.

Friday, January 11, 2019

மனசு



எத்தனை மாற்றங்கள்
என்னை மாற்றிப்
 போனாலும்
உடலால் மாறுகிறேன்
உன் உணர்வால்
மாறவில்லை!


எத்தனை வசந்தங்கள்
என்னை  வந்து 
தழுவினாலும்
அத்தனையும் 
என் வாசலோடு 
போகிறது 
மஞ்ஞனைகள்
வருவதில்லை!



எத்தனை புன்னகைகள்
என் உதட்டில் பூத்தாலும்
அதனையும் உதிர்ந்தே
போகிறது 
உனக்கான 
நிஜப்புன்கைக்கு
 இடைவெளி
விட்ட படி! 


எத்தனை காதல்கள்
என் உள்ளம் எனும்
ஆழ்கடலில்
மிதப்பாய் வந்து
உரசினாலும்
உன் ஒற்றைக் 
காதலுக்காய்
நான் தட்டத்தனி
தீவில் -  இவன்
தேகம் எனும் தேசத்தில்
மனசே மனம் சேரவா!

                                 ✍
                                ஷியா.


காதல் ரீங்காரம்


நூற்றாண்டின்
நொடிகள் வேண்டும்
நொடிகள் தோறும்
நீ வேண்டும்!

உன்னோடு கூடும்
முன்பு - நான்
தனிமையில்
கழித்த அந்த இழமைக்கும்
சேர்த்து இன்னொர்
ஜென்மம் வேண்டும்!

எந்தன் இழமையை
களவு கொண்ட
நரைகளும் கூட
நம் காதல் ரீங்காரம்
இசைக்க வேண்டும்!

உணவுப் பந்தியில்
குவித்து வைத்த
எண்ணக்கொள்ளாத
சோறுபோல்
பிரியாது பிணைந்திருக்க
வேண்டும்!

கவிப் பந்தியில்
களைந்தால் கூட
களையாத பொருள்
போல் கலந்திருக்க
வேண்டும்!

தனிமையில் கூட
நாம் மட்டும்
தனித்திருக்க வேண்டும்!

இனிமையில் என்றும்
எம் வாழ்வே எண்ணற்ற
இனிமை தரவேண்டும்!

ரேகைகள் கூட
தேயாத தேகம்
கொள்ள வேண்டும்
நம் தீராத காதல்
போல!

ஷியா

Thursday, January 10, 2019

சாது


மனங்களை
வருடிய
வசந்தம்
 இலையுதிர்த்து
வரண்டு நின்று
தன்னையே
வருத்திக் கொள்வது
போல் பெண்மையும்
விட்டுக் கொடுப்பின்
விளிம்பில்
தியாகத்தின்
சின்னமாய்
விழிகளால்
விருந்தளிக்கிறாள்
விடை பெறும்
கண்ணீரை!
             

Sunday, January 6, 2019

இறந்த இதயம்


ஓராயிரம் கனவுகளுடன்
உலவுகின்றன
தென்றலைப் போல்
உலவி வந்தள்!

பாரம் அறியா வயதினிலே
வாழ்க்கைச் சக்கரத்தின்
இரண்டாம் பாகம்
எனும் புது உறவை
தலையில் சூடிக் கொண்டவள்!

துணை என்னும் வேலிக்குள்
துரு துருத்துச் சுற்றியவள்
கருணைக் கடலின்
ஆழமாய் நின்றவள்!

மனிதனை அன்றி
பட்சிகளுக்கும்
பசித்திடக் கூடாதென்று
ஓர சாரமெல்லாம்
தீனி போடும் பெண்ணவள்!

அழகுக்கு வெட்கம்
வரும் அவள் அழகு கண்டு
அத்தனையும்,அவள் செயலும்
அழகெனக் கொண்டவள்!

இவள் இன்பம் கண்டு
இயற்கை எரிச்சல் கொண்டதோ
என்னவோ சுழற்றிய
சூறாவளியை நிறைத்து
வைத்தது இவள் வாழ்க்கை
தோப்புக்குள்!

சுழற்றிய திசை எல்லாம்
பிய்த்து வீச பஞ்சமும், வெஞ்சமும்
நெஞ்சே நிறைய
வஞ்சியின் வாழ்வோ
பிஞ்சன பஞ்சுகள் போல்!

தஞ்சம் புகுவிடமெல்லாம்
வெஞ்சமே மீதமாக
வஞ்சி அவளோ வையக
வீதியில் வடுக்களை
வாங்கியே கனத்திட்ட
ஜடமாக இதயம்
துடிக்க அவளோ இறந்து
கிடக்கின்றாள்!
உலகமே அவளை மறந்து
சிரிக்கிறது!

இதயம் இறந்தும் துடிக்கிறது!
           
                                           ✍
                                         ஷியா.
                                         ...........