Tuesday, October 29, 2019
புறவழியால் நுழைகிறார்கள்
என் அழகான அடுக்கல்களை
யாரோ கலைத்துப் போட்டிருக்க
வேண்டும்........
நான் வரிசைப் படுத்திய
வாசகங்களில் யாரோ
எதையெதையோ கலந்திருக்
வேண்டும்......
என் அடுக்கல்களின் இருப்பிடம்
தனித்துவத்தை இழக்கிறது
அங்கு பொருள் பட்டும் படாமல்
ஏதேதோ குவிகிறது......
நான் ஒதுக்கி விலக்கிப்
பார்க்கிறேன் யாரோ நான் இல்லாத
நேரங்களில் அனுமதியின்றி
புறவழியாக நுழைகிறார்கள்
போலும்.......
என் வரிசைகளின் வரைவிலக்கணம்
சில பிதற்றல்களால் நிரப்பப்படுகிறது
உங்கள் இடங்களில் வரைந்து
கிழித்துப் போடுங்கள்
என் அமைவிடத்தின் அமைதியைப்
பறிக்காதீர்கள்.......
இது நிம்மதியைத் தேடி எழும்
கோட்டை..........
Sunday, October 27, 2019
இறைவா_கருணை_காட்டு
மழையே சற்று ஓய்வெடு
எங்கள் செல்லத் தாரகையான்
பூமித்தாயின் மடிக்குள்
சுருண்டிருக்கிறான்......
அவன் மூவிரு தினங்களாக
கண்விழிக்க வழியின்றி கரும் இருளில்
கலங்கிக் கொண்டிருக்கிறான்......
நானும் மழை ஓய வந்து ஈ என்று
போகும் வெயிலை போல்
நொடிக்கொரு முறை அந்த
அழகோவியம் மீண்டு
விட்டதா என ஏங்கிக் கொண்டே
எட்டிப் பார்க்கிறேன்......
இன்னும் இன்னும் போராட்டமே
பதிலாகிறது பொய்களும்
பதிவாகிறது.....
என் வீட்டு முற்றத்தில் உள்ள
அடி கிணறு அவனையே
நினைவூட்டுகிறது .....
மழையே நீ ஓய்வெடு
உன் வருகை அதிகமானால்
பூமித்தாய்கு குளிர்ந்து உடல்
நடுங்கிடலாம்.......
செல்ல மகன் சுஜீத்திற்கும்
வலித்திடலாம்.......
எழுதி என்ன பயன் என்று
ஏங்கயிருந்தேன்
மழையே...... என்னையும்
எழுத வைக்கிறாய் கண்கள்
அழுத வண்ணம்......
அன்னையவள் கதறும் ஓசை
கன்னம் வலித்து
வெடிக்கிறது இதயம்......
கருணை
காட்டு என் இறைவா......
மண்ணறை கூட ஆறடிதான்
எங்கள் செல்ல மகனுக்கோ
நூறடிக்கு மேல் உயிர்த்திருக்க
பூமிக்குள் இடம் தந்தாய்......
இறைவா அவன் மீண்டெழும் வரை
அவன் இருப்பிடத்தை விசாலமாக்கு
அவன் பசிக்கு உணவளி......
அவனுக்கு அவன் தாய் போல் நீயே காட்சி
கொடு........
துணையிருந்து மீட்டுக் கொடு
என் இறைவா அந்த அரும் மொட்டை
மழையே நீயும் அவனுக்காக அழுகிறாயோ
கொஞ்சம் நிறுத்திக் கொள்...
பூமித்தாயின் மடியில்
அந்த பூந்தளிர் புகுந்து கிடக்கிறான்.....
க.ஷியா
Subscribe to:
Posts (Atom)